இரண்டாம் அலை காரணமாக கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த ஒரு வார காலமாக கடுமையான ஊரடங்கு தமிழக அரசு விதித்தது.

 


இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் கடந்த ஒரு வார காலமாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் உள்ளாட்சி அமைப்புகள், வேளாண்மை துறை, சார்பில் நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 


 

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சார்பில் நடமாடும் அங்காடி  வியாபாரிகளுக்கு காய்கறிகள் விற்பனை செய்ய காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள உழவர் சந்தையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தங்குதடையின்றி கொண்டுவந்து விற்பனை செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் வியாபாரிகளையும் அனுமதித்து காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

 


 

காஞ்சிபுரம் பெருநகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் பொதுமக்களின் வசிப்பிட பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாண்மைத்துறையின் உழவர் சந்தையில் நடைபெறும் காய்கறி சந்தையில்  ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறி ஏராளமான பொதுமக்கள் வந்து, சமூக இடைவெளியை கூட கடைப்பிடிக்காமல் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

 

 


கொரோனா சிகிச்சை மையம் செயல்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகிலேயே விதிமுறைகளை மீறி காய்கறிகளை வாங்கிட ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருவதால், காஞ்சிபுரம் பகுதியில் நோய்த்தொற்று பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நடமாடும் காய்கறி அங்காடிகளுக்கு மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்யவேண்டிய வியாபாரிகளும், பொதுமக்கள் வந்து வாங்குவதை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

 

காய்கறி சந்தையை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய வேளாண்மைத் துறை அதிகாரிகளும் கண்மூடி வேடிக்கை பார்ப்பது வேதனையாக உள்ளது என்றும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பொதுமக்கள் கூடி நோய் தொற்று பரவும் அபாயத்தை தடுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 









 

கொரோனா  வைரஸ் தொற்று குறைந்து வரும் இந்த நேரத்தில் பொதுமக்கள் இவ்வாறு சமூகப் பொறுப்பு இல்லாமல் வெளியே சுற்றுவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனப்புரிந்து ஊரடங்கை முறையாக  கடைபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.