பண்ருட்டி அருகே சட்டையை அயனிங் செய்தபோது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள கனிசப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் மகன் கிருஷ்ணராஜ் (17). பண்ருட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், இன்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக தனது சட்டையை அயனிங் செய்து கொண்டிருந்தபோது அயனிங் பெட்டியில் இருந்து இவரது உடலின் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

 

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் கிருஷ்ணராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து அடுத்த வாரம் சபரிமலைக்கு செல்ல இருந்த நிலையில், கல்லூரி மாணவர் மின்சாரத் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.