பிபின் ராவத்தை விமர்சிக்கும் முறை தமிழ் கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல - மகாபாரதத்தை சுட்டிக்காட்டி நீதிபதி அறிவுரை
பிபின் ராவத்தை விமர்சிக்கும் முறை தமிழ் கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல - மகாபாரதத்தை சுட்டிக்காட்டி நீதிபதி அறிவுரை
மனோஜ் குமார் Updated at:
26 Jan 2022 01:02 PM (IST)
’’உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் குறித்து மனுதாரர் விமர்சித்திற்கும் முறை தமிழ் கலாச்சாரத்திற்கும் உகந்தது அல்ல" - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து’’
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து, முகநூலில் அவதூறாக பதிவு செய்ததாக சிவராஜ் பூபதி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததை அடுத்து, "சர்வாதிகாரி பிபினுக்காக கண்ணீர் சிந்துவது அவமானம்! என முக நூலில் பதிவிட்டதற்காக சிவராஜ பூபதி மீது 153, 504, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சிவராஜ பூபதி மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மனுதாரர் மீது 153, 504, 505(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் அதுபோல மனுதாரர் எந்த செயலிலும் ஈடுபடவில்லை. ஆகவே அவர் மீது வழக்குப் பதிவுசெய்தது செல்லாது எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். உத்தரவின் முடிவில், மனுதாரர் மகாபாரதத்தின் கடைசி அத்தியாயத்தை படிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
அனைவரும் இறந்துவிட்ட சூழலில் யுதிஷ்டிரன் கடைசியாக செல்கிறான். அவர் சொர்க்கத்தின் உள்ளே நுழைந்ததும், அங்கே மகிழ்ச்சியுடன் துரியோதனன் அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆத்திரம் நிறைந்து, கடுமையான வார்த்தைகளை உதிர்த்தார். நாரதர் புன்னகையுடன் அவரிடம் “அப்படி இருக்கக்கூடாது. யுதிஷ்டிரா!. சொர்க்கத்தில் அனைத்து பகைகளும் நின்றுவிடும். மன்னன் துரியோதனை அவ்வாறு சொல்லாதே" என குறிப்பிடுவார். அது போல உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் குறித்து மனுதாரர் விமர்சித்திற்கும் முறை தமிழ் கலாச்சாரத்திற்கும் உகந்தது அல்ல" என குறிப்பிட்டுள்ளார்.