திருவண்ணாமலை அடுத்த  வேங்கிக்கால் எழில் நகரை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன் மனைவி பூர்ணிமா வயது (41). இவருக்கு ஏற்கனவே கோவையை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெற்றார். அதைத்தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு குடியாத்தம் செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்தன் வயது (45) என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.


இந்நிலையில், லட்சுமிகாந்தன் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சிப்பதாக தகவல் அறிந்து பூர்ணிமா அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து பூர்ணிமா கேட்டதற்கு லட்சுமிகாந்தன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.


கொலை மிரட்டல்:


இதனை தொடர்ந்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பூர்ணிமா புகார் மனு அளித்துள்ளார். பூர்ணிமா அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது, என்னுடைய கணவர் லட்சுமிகாந்தன் இவர் சினிமா துறையில் பணிபுரிந்து வருகிறார். பானா காத்தாடி உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு லட்சுமிகாந்தை  மறுமணம் செய்து கொண்டு சென்னையில் ஐந்தாண்டுகள் இருவரும் ஒன்றாக  வசித்து வந்தோம்.


திருவண்ணாமலையில் சொந்தமாக வீடு வாங்கி செட்டில் ஆகலாம் என கணவர்  லட்சுமிகாந்தன் தெரிவித்ததால் தற்போது என்னுடைய தாய் வீட்டில் தங்கி இருக்கிறேன். தற்போது , என்னுடைய  கணவர் லட்சுமிகாந்தன், சுவேதா என்ற பெண்ணுடன் தனியாக வசித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிகிறது. இதுகுறித்து கேட்டதற்கு என்னுடைய கணவர் லட்சுமிகாந்தன் கொலை மிரட்டல் விடுகிறார். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், லட்சுமிகாந்தனிடம் அனைத்து மகளிர் காவல்துறையின்  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.