சென்னையில் இருந்து மைசூர் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் நேற்றி காலை 8:15 மணி அளவில் சென்னையில் இருந்து காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி வழியாக மைசூர் நோக்கி  சென்று கொண்டிருந்தது. அப்போது  வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியிற்கு ரயில் வந்தபோது திடீரென ரயில் உள்ள எஸ் 14 கோச் என்ற பெட்டியின்  கண்ணாடி உடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த  ரயில் பயணிகள் இதுகுறித்து ரயில் ஓட்டுநர் மற்றும் டிக்கெட் பரிசோதகரிடம் உடனடியாக  தகவல் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து தகவல் அறிந்த வந்தே பாரத் ரயில் ஓட்டுநர் உடனடியாக எஸ் 14 கோச்சை நேரடியாக சென்று சோதனை செய்து அங்கு இருந்தவர்களிடம் கண்ணாடி உடைப்பு குறித்து விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரயில் ஓட்டுநர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சென்று கண்ணாடி உடைப்பு  குறித்து ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.


 




 


இந்த புகாரை பெற்றுக்கொண்ட ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வந்தனர்‌. அதனைத்தொடர்ந்து வாணியம்பாடி புதூர்  அடுத்த  திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த குபேந்திரன் வயது (21) என்பவர் ரயில்வே தண்டவாளத்தில் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருப்பது தெரிய வந்தது. பின்னர் ரயில்வே காவல்துறையினர் விரைந்து சென்று  குபேந்திரனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் குபேந்திரன் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசியது தெரியவந்துள்ளது. 


 




அதன் அடிப்படையில் ரயில்வே காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்று  விசாரணை மேற்கொண்டதில் அவர்  மதுபோதையில் வந்தே பாரத் ரயில் மீது கல்லை வீசியது ஒப்புக்கொண்டு உள்ளார். குபேந்திரனை கைது செய்த ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குபேந்திரன் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வந்தே பாரத் ரயிலின் மீது கல்வீசிய சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.