தமிழ்நாடு அரசின் தகைசால் விருதுக்கு முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதியன்று நடைபெறும் சுதந்திர தினத்தின் போது முதல்வர் மு.க ஸ்டாலின் இவ்விருதினை வழங்குகிறார்.     


இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின்  ஏற்கனவே ஆணையிட்டிருந்தார். 






இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யாவைப் பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டிற்கான “தகைசால் தமிழர்” விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.














"தகைசால் தமிழர்" விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரய்யாவுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும்". 


இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.   


மேலும், வாசிக்க: 


Sankaraiah 100: அனைவருக்கும் வழிகாட்டும் தியாக வாழ்விற்கு சொந்தக்காரர் சங்கரய்யா : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து..!