மாநில அளவிலான கல்விக்கொள்கையினை வகுத்திட கல்வியாளர் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த முதலியார்குப்பத்தில், மாணவர்களின் நலனுக்காக இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தினை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து மாநில அளவிலான கல்விக்கொள்கையினை வகுத்திட கல்வியாளர் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மத்திய அரசின் புதியக் கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என எற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. 
இல்லம் தேடிக் கல்வித்திட்டம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. மாணவச் செல்வங்களும் பெற்றோர்களும் எளிதில் அணுகிப் பெறும் வகையில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடிக் கல்வி திட்டம் தமிழ்நாட்டுக் கல்வியினை மேலும் மேம்படுத்தும். மாணவர்களும், பெற்றோர்களும் எளிதில் அணுகிப் பெறும் வகையில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும், சமூகத்திற்கும் தன்னார்வலர்கள் அரசுப் பள்ளிகளின் நல்லெண்ணத் தூதுவர்களாக இணைப்புப் பாலமாக செயல்படுவர். குறைந்தபட்சம் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.


 தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நவம்பரில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. 


கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் இருந்ததால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.  இதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டில் இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை  சார்பில் தொடங்கப்படும் இத்திட்டம் 1.70 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு  இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக இன்று விழுப்புரம், மதுரை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுகல், உ ள்ளிட்ட 12 மாவட்டங்களில் இந்த திட்டமானது  செயல்படுத்தப்பட உள்ளது. பின்னர் மீதமுள்ள 26 மாவட்டங்களில் இந்த திட்டம் அடுத்தகட்டமாக தொடங்கப்பட உள்ளது. இல்லம்தேடி கல்வி திட்டமானது 92,297 கிராம பகுதியில் வசிக்கும் 34,05,856 மாணவ மாணவிகள் இதன் மூலம் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இல்லம் தேடிகல்வித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறி முறைகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன் படி, கற்பித்தல் மையங்கள் பாதுகாப்பான, சுகாதாரமான, குழந்தைகள் அணுக கூடிய வகையில் தேர்வு செய்யப்பட வேண்டும். போதுமான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் இடம் மதச்சார்பற்ற மற்றும் பாகுபாடு அற்ற இடமாக இருக்க வேண்டும். அரசு கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் போன்ற இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் மாநில அளவிலான கல்விக்கொள்கையினை வகுத்திட கல்வியாளர் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.