தமிழகத்தில் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் தமிழ்ப்புத்தாண்டை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “ தமிழ்ப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.


“ஆதிமனிதன் தமிழன்தான்


அவன் மொழிந்ததும் செந்தமிழ்த்தேன்


என்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கவிதைக்கேற்ப தொன்மையும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ்மொழியை பேசும் உலகின் மூத்த குடியான தமிழ்ப் பெருமக்கள் பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.


மலரும் இப்புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலவட்டும். நலமும், வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, தமிழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.