தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. விஜய் தான் சந்தித்த முதல் தேர்தலிலே முதலமைச்சராக பொறுப்பேற்றிருப்பதால் அவரது ஆட்சி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

அதிகாரிகள் போக்கு:

விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் செங்கோட்டையன் தவிர முதலமைச்சர் விஜய் உள்பட அனைவரும் அமைச்சரவைக்கு புதியவர்கள். தவெக-வின் எம்எல்ஏ-க்களில் செங்கோட்டையன், விஎஸ் பாபு, ஆனந்த் தவிர அனைவருக்கும் இதுதான் எம்எல்ஏ ஆவது முதன்முறை ஆகும்.

திமுக-வின் கடந்த ஆட்சியிலே அமைச்சர்களை காட்டிலும் அதிகாரிகளே பல துறைகளில் முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும், அதற்கு அமைச்சர்களையும் சம்மதிக்க வைப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்தது. இந்த சூழலில், ஆட்சிக்கு புதியதாக வந்துள்ள தவெக அரசிலும் சில அதிகாரிகள் அதேபோக்கை கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Continues below advertisement

ஐஏஎஸ் மாற்றம் நடந்தது என்ன?

முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளே ஒரே பவர்சென்டர் தான் மட்டுமே என்பதை மிகவும் திட்டவட்டமாக விஜய் அறிவித்திருந்தார். ஆனாலும், சில அதிகாரிகள் அமைச்சர்களின் உத்தரவுகளுக்கே கட்டுப்பட மறுத்துள்ளனர். இந்த சூழலில், தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகளாக மக்களால் அறியப்பட்ட ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹு உள்ளிட்ட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டனர். 

தவெக ஆட்சி அமைந்த பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டிருந்தாலும் முக்கியமான அந்த 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் முதலமைச்சரின் நேரடி உத்தரவின்பேரில் நடந்துள்ளது. முக்கியமான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான சுப்ரியா சாஹு, உமாநாத், ராதாகிருஷ்ணன், பாஸ்கர பாண்டியன், பூஜா குல்கர்னி ஆகியோர் அதிகாரமற்ற சாதாரண பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் திக்.. திக்:

வியாசர்பாடி பேருந்து முனையத்திற்குச் சென்றபோது முறையாக பதிலளிக்காத காரணத்திற்காக வள்ளலாரையும், பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதன் விசாரணைக்கு ஒத்துழைக்கும் விதமாகவும் சுப்ரியா சாஹுவையும் முதலமைச்சர் பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பணியிட மாற்றப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் அமைச்சர்கள் பலரது உத்தரவுக்கும் கட்டுப்பட மறுத்து தன்னிச்சையாக செயல்பட்டதும் ஒரு காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா-வின் ஆட்சியின்போது அவர் யாரை எப்போது பணியிட மாற்றம் செய்வார்? எந்த அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி வீசப்படுவார்? என்ற ஒரு அச்சம் இருந்து கொண்டே இருக்கும். தற்போது ஜெயலலிதா பாணியிலே முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கைகளும் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

சீனியர் மற்றும் தவிர்க்க முடியாத ஐஏஎஸ் அதிகாரிகள் என்று கருதப்படுபவர்களே டம்மி பொறுப்புக்கு அனுப்பப்பட்டிருப்பதால் தாங்கள் ஏதேனும் தவறு செய்தாலும் இதே போல பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் மற்ற அதிகாரிகளுக்கு உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.