தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் இந்த ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்களில் சிலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர்.
திமுக-வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதாகிய நிலையில், மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது,
திட்டமிட்டு கொள்ளையா?
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து வருவார். வரும்போது ஒரு கேள்வி கேட்பாரு. நீ பதில் சொல்ல முடியுமா? இவன் பெரிய யோக்கியனா? கை கறை இல்லாததாம். இன்னைக்கு மணல் எல்லாம் ஏலம் விட விட்ருக்கான். யாருக்கு விட்ருக்கான்?
இந்த ரெட்டிக்கு கொடுத்துட்டாங்க, சேகர் ரெட்டிக்கு கொடுத்துட்டாங்க. இவருக்கு கொடுத்துட்டாங்க, அவருக்கு கொடுத்துட்டாங்கனு. எப்படி கொடுக்கிறாய்? எந்த வகையில் கொடுக்கிறாய்? பணத்தை கொள்ளையடிப்பதில் திட்டமிட்டு கொள்ளையடிக்கிறீர்களா?
ரவுடிக்கு ரவுடி:
திமுக மற்றும் அதிமுக-வை இன்று ஏதோ தப்பு செய்தது போல சொல்றீங்க? இன்று உன் கதை என்ன? மின்துறை அமைச்சரின் மனைவி தாம்பரத்தில் ஆசிரியையாக வேலை செய்தார். கலந்தாய்வு இருந்தால் ஆசிரியையாக மாற்றுவார். அவருடைய மனைவியை திருவல்லிக்கேணிக்கு மாற்றிக் கொண்டு வந்துள்ளார். அதிகார துஷ்பிரயோகமா?
அவர் சொல்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் ரவுடியாம். எத்தனை பேரை வெட்டியிருக்கிறேன்? எத்தனை பேரை கொலை பண்ணியிருக்கிறேன்? 16 வயதில் இருந்து நான் தொழில் செய்கிறேன். எந்த கடுமையான வார்த்தைகளும் எவரையும் பேசியதில்லை. ஆனால், மின்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரவுடி என்கிறார். ஆம். நான் ரவுடிக்கு ரவுடிதான். எங்களைத் தொட்டுப்பார்க்க முடியாது. நீ உசிலம்பட்டியில் இருக்கலாம். எங்கும் இருக்கலாம். ஆனால், நடக்காது தம்பி.
இவ்வாறு அவர் பேசினார்.
அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்கனவே முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசிய காரணத்திற்காக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் தான் ரவுடிக்கு ரவுடி என்று பேசியிருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
மேலும், அவர் பேசும்போது ஆட்சி உங்களுக்கு நிரந்தரமா? நாங்கள் கூப்பிட வேண்டிய அவசியமில்லை என்றும், தானாக வந்துவிடுவான், 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்றும், மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவது உறுதி என்றும் பேசினார்.
