CM Stalin: திருவண்ணாமலையில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


திருவண்ணாமலை சாலை விபத்து:


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனுர் எனும் இடத்தில் புறவழிச் சாலையில் பெங்களூர் நோக்கி திருவண்ணாமலையில் இருந்து சொகுசு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது காரின் முன்பு சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்படும்போது எதிரில் ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி வந்து கொண்டு இருந்த லாரி மீது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 2 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மேலும், பெண் ஒருவருக்கு பலத்து காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


முதல்வர் ஸ்டாலின் இரங்கல்:


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் காந்தி நகர் பகுதி, திருவண்ணாமலை பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் இன்று (15-10-2023) காலை காரும், லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உட்பட எழு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.


இவ்விபத்தில் படுகாயமடைந்து திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும் படுகாயமடைந்து மருத்துவமனையில் பெற்றுவருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


எடப்பாடி பழனிசாமி இரங்கல்:


மேலும், இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், ”திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், பக்கிரிபாளையம் பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்றவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்" என்றார்.