பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது  என குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






இது தொடர்பான பதிவில், “ புகழ்பெற்ற லோக்நிதி ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 27% பேர் வேலையின்மை தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும், 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.


இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். 'சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது” என குறிப்பிட்டுள்ளார். 


நாடே உற்று நோக்கும் நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என அக்கட்சி தரப்பில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இது போன்ற போட்டியில் பாஜக ஆட்சியில் என்னென்ன குறைபாடுகள் இருப்பது என்பது குறித்து ஆங்கில நாளிதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் பாஜக ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்சனைகள் சந்தித்து வருகின்றனர் என மக்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.