CM Stalin Criticises GST : கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில்  திமுக இடம் பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆளும் பாஜக அரசை விமர்சித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். 


இப்படியான நிலையில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், “GST: வரி அல்ல… வழிப்பறி! “தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி! ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்!






அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.