கருணாநிதியின் நினைவு தின பேரணியில் பங்கேற்று மாரடைப்பால் உயிரிழந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கு.சண்முகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 


கருணாநிதி நினைவு தின பேரணி


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ஆம் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி நினைவு தின அமைதி பேரணி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 


அண்ணாசாலை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலையில் இருந்து தொடங்கிய அமைதிப் பேரணி  மெரினா நினைவிடத்தில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முடிந்தது. பின்னர் அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவு தின பேரணியில் சென்னை மாநகராட்சியின் 146வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கும் ஆலப்பாக்கம் சண்முகம் கலந்து கொண்டார்.


ஆலப்பாக்கம் சண்முகம் மரணம்


62 வயதான இவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.  இன்று காலை நினைவு தின அமைதி பேரணியில் பங்கேற்க காரில் வந்தார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் அண்ணா சாலையில் இருந்து கடற்கரை நோக்கி  நடந்து சென்றார். சரியாக கலைவாணர் அரங்கம் அருகில் சென்றபோது சண்முகத்துக்கு லேசான மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக கார் டிரைவரை தொடர்புகொண்டு வரும்படி தெரிவித்துள்ளார்.


ஆனால் கார் வருவதற்குள் அவர் மயங்கி விட்டார். உடனடியாக சக நிர்வாகிகள் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவனைக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சண்முகத்திற்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில்,  நேற்று நடந்த மாரத்தான் போட்டியிலும் கலந்து கொண்டு 5 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்கு நாளை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலமைச்சர் இரங்கல் 


இந்நிலையில் ஆலப்பாக்கம் சண்முகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “பெருநகரச் சென்னை மாகராட்சியின் 146வது வார்டு மாமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஆலப்பாக்கம் கு.சண்முகம்  இன்று (7-8-2023) கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்றிருந்த நிலையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரும் அடைந்தேன். மதுரவாயல் பகுதியில் கழகம் வளர்த்த செயல்வீரரான அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.