தமிழ்நாடு அரசு போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக காவல்துறையினரும் கடும் சட்டங்களை இயற்றி நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில் போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,


தந்தையாக முதல்வர் சொல்லும் அறிவுரை:


“ தமிழ்நாட்டில் இளைஞர், மாணவ சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள். போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். போதை ஒழியட்டும். பாதை ஒளிரட்டும்” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.






தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியும் போதைக்கு எதிராக தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். விஜய் ஆண்டனி இந்த வீடியோவில் “போதை என்பது ஒரு கொடிய விலங்கு. சமீபகாலமாக தமிழ்நாடு அரசு அதை ஒழிக்க பெரும்பாடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசுக்கு நாமும் துணை நிற்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.


போதைப்பொருள் பயன்பாடு:


தமிழ்நாடு உள்பட இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். பல மாநிலங்களிலும் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள்  போலீசாரால் கைப்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அரசு சார்பில் அழித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு தொடர்ந்து போதைக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.