சேலம் மாநகராட்சி மணக்காடு பகுதியில் உள்ள துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக சேலம் மாநகராட்சியில் 54 தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் 5,719 மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,  ”காலை உணவு திட்டத்தின் மூலமாக குழந்தைகளின் கல்வித்திறன் அதிகரித்துள்ளது. பள்ளிகளுக்கு சரியான நேரத்திற்கு பள்ளி குழந்தைகள் வருவதால் வருகை பதிவேடு சரியாக உள்ளது. 


மேலும், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. காலை உணவு திட்டம் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறது. மிகவும் சரியான முறையில் செயல்பட்டு வருகிறது.



சாலையோரம் குழந்தைகள் தங்கி உணவுக்கு வழியில்லாமல் இருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவ்வாறு இருக்கும் குழந்தைகள் பள்ளியில் சேர்த்து விடலாம். மாவட்ட ஆட்சியர் இருக்கிறார். இருந்தால் கூறவும் பள்ளியில் சேர்த்து விடலாம் என்று கூறினார். அப்போது மாவட்ட ஆட்சியர் பேசிய போது, சாலையோரம் இருப்பதை காட்டினால் உடனடியாக நான் நேரடியாக வந்து பள்ளியில் சேர்க்க தயாராக உள்ளேன். பொதுவாக கூற வேண்டாம். எங்கு இருக்கிறார்கள் என்று சரியான இடத்தை கூறுமாறு மாவட்ட ஆட்சியர் கூறினர். இதை தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2023-2024 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். உறுதியாக முதலமைச்சர் அறிவித்துள்ளதை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.



மேலும் குழந்தை திருமணம் குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிகம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வயது குறைந்தவர்கள் காதல் திருமணம், பெற்றோர்கள் குறைந்த வயதில் திருமணம் செய்து வைத்தல் ஆகியவை குழந்தைகள் திருமணத்தில் வருகிறது. இவ்வாறு திருமணம் நடைபெறுவதாக புகார் வந்தவுடன் திருமணங்கள் நிறுத்தப்படுகிறது. 18 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் அவர்களாகவே திருமணம் செய்துகொள்வதால் குழந்தை திருமணம் எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது. குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அதிக குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை திருமணம் குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருமணத்திற்கு முன்பாகவே நிறைய செல்போன் அழைப்புகள் வருகிறது. அதன் அடிப்படையில் உடனே திருமணங்களை நிறுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளார். வயது குறைவாக உள்ள பெண் குழந்தைகள் திருமணம் செய்வது தெரிந்தால், நீதிமன்றங்கள் மூலமாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் வயது சான்றிதழ் இல்லாமல், குறிப்பாக 18 வயது முடியாமல் உள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது இல்லை, பதிவும் செய்ய முடியாது” என்று பேசினார்.


ஆயுள் போது சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்தவராஜ், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.