காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்கபட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ம் தேதி வரை திறக்கப்படும் தண்ணீரின் வாயிலாக குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகங்களுக்கு தண்ணீர் விடுவிக்கப்படுகிறது. 



தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் உரிய தேதியில் மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 8 மதகுகளை இயக்கும் பொத்தானை அமுக்கி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். முதல்கட்டமாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசன தேவையை பொறுத்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேட்டூர் வந்தடைந்துள்ளனர்.



மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு தொடங்கி உரிய தேதியான ஜூன் 12 அன்று 18 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்கு முன்னதாக 11 முறை திறக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக 60 ஆண்டுகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 ஆண்டு கால வரலாற்றில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த ஆண்டு முதல் முறையாக கோடை காலமான மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெல்டா பாசனத்திற்காக காவிரியில் ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படுவதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீரானது வருகின்ற 27 அல்லது 28 ஆம் தேதிகளில் கல்லணை சென்றடையும். இதன் மூலம் 16.5 லட்சம் ஏக்கர் வசனம் பெறவுள்ளது. நடப்பு ஆண்டில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பையொட்டி தமிழக அரசு சார்பில் 4061 கி.மீ தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.