தமிழ் பரப்புரைக் கழகத்தை தமிழ்நாடு முதலமைசசர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்ப்‌ பரப்புரைக்‌ கழகமானது தமிழ்‌ இணையக்‌ கல்விக்கழகத்தின்‌ மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் ஆகும். இதன் பணிகளுக்கான தொடக்க விழாவைத் தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


தமிழ் பரப்புரை கழகத்தை, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் படி 24 மொழிகளில் தமிழ் பாடநூல்கள் வெளியிடப்பட்டு, 22 நாடுகளில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழ் பரப்புரை கழகம் திட்டத்தை செயல்படுத்த, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ரூ.1கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தமிழை வளர்க்கத் தொடங்கப்படும் தமிழ்ப்‌ பரப்புரைக் கழகம் என்ன செய்து வருகிறது? பார்க்கலாம்.  


* தமிழை எளிமையாகக்‌ கற்பதற்கான தமிழ்ப்‌ பாடநூல்கள் உருவாக்கம்‌, 


* வெளிநாடுகள்‌ மற்றும்‌ வெளி மாநிலங்களில்‌ தமிழைக்‌ கற்பிக்கும்‌ அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல்‌,


* தமிழைத்‌ திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல்‌,


* புலம்பெயர்ந்த தமிழர்கள்‌ மற்றும்‌ அயல்நாட்டில்‌ வசிக்கும்‌ தமிழர்களுக்கு ஐந்து நிலைகள் மூலம் புதிய பாடத்திட்ட அடிப்படையில்‌ புத்தகங்கள்‌ உருவாக்கம், 


* புத்தகத்தை 24 மொழிகளில்‌ மொழிபெயர்த்து வழங்குதல்‌, 


* செயல் வழிக்‌ கற்றல்‌ என்ற அடிப்படையில்‌ கற்பித்தல்‌ துணைக் கருவிகளை உருவாக்கி, அதனை இணையம்‌ வழியாக வழங்குதல்‌, 


* ஒளி - ஒலிப்‌ புத்தகமாக வடிவமைத்தல்‌, 


* அசைவூட்டும்‌ காணொலிகளை வழங்குதல்‌,


* சொற்களஞ்சியத்தைப்‌ பெருக்கும்‌ விதமாக மின்‌ அட்டைகள்‌ வழங்குதல்‌, 


* இணையம்‌ வழியாகக் கற்றல்‌ பயிற்சியை வழங்குதல்‌, 


* கற்றறிந்த ஆசிரியர்களைக்‌ கொண்டு இணைய வகுப்புகள்‌ எடுத்தல்‌, 


* தேவைகளுக்கேற்ப ஆசிரியர்கள்‌/கலைப்‌ பயிற்றுநர்களை அயல்நாட்டுக்கு அனுப்புதல்‌,


* மொழித்திறனை வளர்க்கும்‌ பயிற்சிகள்‌, தேர்வுகள்‌ முதலானவற்றை மேற்கொள்ள கற்றல்‌ மேலாண்மை அமைப்பு (Learning Management System) செயலி உருவாக்கம்,


தமிழ் மொழியை அயலகத்‌ தமிழர்களுக்கு இணைய வழியில்‌ கற்றுக்‌ கொடுக்க 100 ஆசிரியர்கள்‌ தேர்வு‌ ஆகிய பணிகளை தமிழ்ப்‌ பரப்புரைக் கழகம் மேற்கொண்டுள்ளது.


தமிழ்ப்‌ பரப்புரைக் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?


* அயல்நாடுகளில்‌ உள்ள தன்னார்வலர்கள்‌ முறையாகத்‌ தமிழைக்‌ கற்பிக்க அவர்களுக்கு ஆசிரியர்‌ பட்டயப்‌ பயிற்சி.


* காணொலி வடிவில் சிலம்பாட்டத்தின்‌ அடிப்படைப்‌ பயிற்சிகள்‌.


* நிகழ்த்து‌ கலைகளைப்‌ பயிற்சிக்‌ காணொலிகளாக வழங்குவதற்கான முன்னெடுப்பு.


* தேவாரம், திருவாசகப் பாடல்களை ஓதுவார்களால்‌ இசை நயத்துடன்‌ பாடச்‌ செய்து, வரலாற்றுத்‌ தலங்களின்‌ சிறப்பைக்‌ காட்சிப்படுத்தும்‌ காணொலிகள்‌ உருவாக்கம் ஆகிய பணிகளை தமிழ்ப்‌ பரப்புரைக் கழகம் செய்ய உள்ளது.


 






இந்நிலையில் இன்று தமிழ்ப்‌ பரப்புரைக்‌ கழகத்‌ தொடக்க விழாவும்‌, தமிழ்‌ இணையக்‌ கல்விக் கழகத்தால்‌ உருவாக்கப்பட்ட பாடத்திட்ட அறிமுக விழாவும்‌  முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் தலைமையில்‌ இன்று நடைபெற்றது.