சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காகவே இந்த சிற்பி திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ” சிறார் குற்றங்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. சுய ஆளுமை திறன், பெற்றோர் பேச்சை கேட்டு நடப்பது போன்ற பண்புகளை சிறார்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். சிறார்கள் குற்றம் அதிகரிக்க குடும்ப வறுமை, பொருளாதார நிலைமையே காரணமாக அமைந்துள்ளது.


சிற்பி திட்ட மாணவர்களுக்கு பயிற்சி, உணவு உள்ளிட்டவற்றுடன் 8 இடங்களுக்கு கல்வி சுற்றுலாவும் அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். சிற்பி திட்ட பயிற்சி காலத்தில் எந்தவித மனித உரிமை மீறலும் இருக்க கூடாது” என தெரிவித்தார். 


சென்னையில் பெருகி வரும் சிறார்களின் குற்றச்செயல்களை தடுக்க, சென்னை மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சிறார் குற்றசெயல்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் 'சிற்பி' என்னும் புதிய திட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


இதன் மூலம், சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்பட்ட சிறுவர்களை கண்டறிந்து வழிகாட்டவும் சென்னையில் சிற்பி என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. 


சிற்பி திட்டம்: 


8 ம் வகுப்பு முதல் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கென தனி சீருடையும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு தேசிய மாணவர் படை போன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லுதல், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் திறன்களை மேம்படுத்துதல், சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாற்றும் வகையில், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து சட்ட கல்வியறிவு பெறச் செய்தல் போன்றவையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.


இதைதவிர, காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண், காவல் கரங்கள் உள்ளிட்ட அவசரகால எண்கள் குறித்து மாணவர்களுக்கு தெரிவித்து, அச்சிறுவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.