மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாய நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கடந்த மாதம் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அறிக்கையின் மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வினை (CUET) ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி அரசின் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.


நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு மாணவர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.


ஆனாலும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என்று மானியக் குழு தலைவர் ஜெகதேஷ் குமார் அறிவித்திருந்தார். இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி என 13 மொழிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே கேட்கப்படும் என்பதால்  மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படும் என திமுக, இடதுசாரி என பல கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


மட்டுமல்லாது மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு இந்த தேர்வின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கப்படாது என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பொதுத் தேர்வுக்கு கடும் உழைப்பு செலுத்தி படித்து தேர்வு பெறும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும், மாநில பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வுக்கென தனி பயிற்சி எடுக்க வேண்டும். இது தனியார் பயிற்சி நிலையங்களின் ஆதிகத்திற்கு வழிவகுப்பதோடு, பொருளாதார பலம் இல்லாத மாணவர்களால் இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.


இதன் பின்னணியில் சட்டமன்றத்தில் உயர் கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதத்தின்போது பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வினை (CUET) ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி அரசினர் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார்.


ஏற்கெனவே நீட் தேர்வினை திமுக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


 


இத்தீர்மானத்தின் போது பேசிய முதலமைச்சர், மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு, 2022-2023ம் கல்வியாண்டு முதல், அம்மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (National Testing Agency-NTA) நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (Common University Entrance Examination -CUET) மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளதாகவும், +2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனவும், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சம்மான வாய்ப்பினை வழங்கிடாது என்று இப்பேரவை கருதுவதாக கூறிய அவர், பெரும்பாலான மாநிலங்களில், மாணவர்களில் 80 விழுக்காட்டிற்கும் மாநிலப் பாடத்திட்டங்களில் பயின்று வருபவர்கள்தான் எனவும் அவர் கூறினார்.


இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்களாவர் எனவும்,NCERT பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்குத் தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு, இந்தச் சூழ்நிலை நம் நாட்டிலுள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கூறினார்.


இந்நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக் ல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை என குறிப்பிட்ட அவர்,


மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர் மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளதாகவும்,இவ்வாறு ஒரு நுழைவுத் தேர்வினை செயல்முறைக்கு கொண்டு வருவதால், பள்ளிக்கல்வியோடு பயிற்சி மையங்களையும் நாடும் இளைய மாணவ சமுதாயத்தினர் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும், எனவே மாநில அரசுகளின் உரிமையினை நிலை நாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை இரத்து செய்திட ஒன்றிய அரசினை வலியுறுத்துவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.