கடந்த நவம்பர் 11-ஆம் தேதி தமிழகத்திலேயே அதிகப்படியாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழையானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பதிவானது. இதனால் சீர்காழி நகர் மட்டுமின்றி சீர்காழி தாலுக்கா முழுவதும் தண்ணீரில் மூழ்கி தற்போது வரை தத்தளித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசு போர்க்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளிலும் மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 




மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,67,500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பா, தாளடி பயிர்களில் 87,500 ஏக்கர் நிலப்பரப்பு மழை நீரால் சூழப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள மொத்த சாகுபடி பரப்பான 30 ஆயிரம் ஏக்கரில் 25 ஆயிரம் ஏக்கர்  மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரம் உமையாள்பதி கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தார்.




முன்னதாக பச்சை பெருமாள் நல்லூர் அரசு பள்ளியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களை சந்தித்த முதல்வர், அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, உமையாள்பதி ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு சொந்த பகுதியை பார்வையிட்டார். பின்னர் உமையாள்பதியில் வெள்ளம் சூழ்ந்த வயல்வெளிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த நிவாரணம் வழங்கும் மேடைக்கு வருகை புரிந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.




தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் அனைவரும் திருப்தியாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயை மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அமைச்சர்கள் மெய்யநாதன், செந்தில் பாலாஜி, ரகுபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் என பலரையும் இப்பகுதிக்கு அனுப்பி நிவாரண பணிகளை மேற்கொள்ள சொன்னேன். அவர்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். 




இருந்த போதிலும், இது போதாதென நானும் நேரடியாக வந்து ஆய்வு செய்துள்ளேன். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஒரு சில குறைபாடுகள் உள்ளது அது இன்னும் ஐந்து ஆறு தினங்களுக்குள் சரி செய்யப்படும். நிவாரணம் வழங்குவது குறித்து ஒவ்வொரு வரும் ஒவ்வொன்று கூறுவார்கள், அதையெல்லாம் நாம் கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. கணக்கெடுப்பு பணிகள் முழுமை அடைந்தவுடன் நிவாரண குறித்து அறிவிக்கப்படும். எதிர் கட்சிகள் அரசியல் செய்வதற்காக ஆயிரம் கூறுவார்கள், முழுமையான கணக்கெடுப்பு பிறகு நிவாரண தொகை அறிவிக்கப்படும்” என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், ஏ.வ.வேலு, மெய்யநாதன், ரகுபதி, செந்தில் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.