நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் அம்பேத்கர் உள்ளிட்ட வேறு எந்தவொரு தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


முன்னதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது.


இந்த சுற்றறிக்கையில், இந்திய சட்டத்தையே உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் படம் இடம் பெறவில்லை என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து, வழக்கறிஞர்கள் பலரும் நீதிமன்ற வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவிருந்த நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டினை அமைச்சர் ரகுபதி கடிதமாக வழங்கினார். 


இதுகுறித்து அந்த கடிதத்தில், “ நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி மாண்பமை மெட்ராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா அவர்களைச் சந்தித்து இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.


தலைமை நீதிபதி அவர்களிடம் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி அவர்கள், நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் (Status Quo to be continued) எனத் தெரிவித்தார். இத்தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.” என குறிப்பிடப்பட்டு இருந்தது.


அடுத்ததாக, இந்த பேச்சுவார்த்தையின்போது, நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா தெரிவித்துள்ளார்.