கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உலக புகழ் பெற்ற நடராஜர் ஆலயம் உள்ளது இந்த கோயில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலை தீட்சிதர்களே நிர்வகித்து பூஜை செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கோயிலில் மேல் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் உள்ளிட்ட யாரும் சாமி தரிசனம் செய்யக் கூடாது என தீட்சிதர்கள் கட்டுப்பாடு விதித்திருந்தனர். 

 

இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி காலை சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டை சேர்ந்த ஜெயசீலா (37) என்பவர் நடராஜரை தரிசனம் செய்ய கனகசபைக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு இருந்த சில தீட்சிதர்கள் ஜெயசீலாவை கடுமையாக திட்டி, தாக்கி வெளியே அனுப்பி வைத்து உள்ளனர், இதுகுறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து ஜெயசீலா சிதம்பரம் நகர காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சிதம்பரம் காவல் துறையினர் புகாரின் பேரில் விசாரணை செய்து வந்தனர். பெண் பக்தரின் புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

 



 

இதற்கிடையே சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கணேஷ் எனும் தீட்சிதர் (வயது 57). இவர் இரண்டு நாட்களுக்கு முன் இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபைக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முயன்று உள்ளார். இதை பார்த்த அங்கு இருந்த தீட்சிதர்கள் ராஜசெல்வம், சிவசெல்வம், சபேசன் ஆகியோர் கணேஷ் தீட்சிதரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தீட்சிதர்கள், கனகசபைக்கு மேல் ஏறி தரிசனம் செய்ய கூடாது. ஆனால் மேலே ஏறி கோயிலின் விதிமுறைகளை மீறிய காரணத்தால் உங்களை சஸ்பெண்டு செய்து உள்ளோம். இனி கோவிலுக்குள் வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதோடு கணேஷ் தீட்சிதரை மற்ற தீட்சிதர்கள் தாக்கியதாகவும் கூறப்பட்டது.



 

இதில் காயமடைந்த கணேஷ் தீட்சிதர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கணேஷ் தீ்ட்சிதர் கூறுகையில், சமீபத்தில் நடந்த தீட்சிதர்கள் ஆலோசனை கூட்டத்தில், நடராஜர் கோயிலில் கனகசபைக்கு சென்று பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். 



 

இதனால் என்னை தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து சஸ்பெண்டு செய்துவிட்டனர். இருப்பினும், நான் கனகசபைக்கு சென்று தரிசனம் செய்ய முயன்றபோது தாக்கப்பட்டேன் என கூறியிருந்தனர்.சிதம்பரம் நடராஜர் கோயிலில் கணேஷ் தீட்சிதர், ஜெயசீலாவை தீட்சிதர்கள் அடுத்தடுத்து தாக்கிய, இந்நிலையில் தற்பொழுது அவர்கள் வழக்கு தொடரப்பட்டு இருப்பது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.