44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளன.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அதிபன் வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் முகமது சையத்தை வீழ்த்தி தமிழ்நாடு வீரர் அதிபன் வெற்றி பெற்றார்.
இதேபோல் ஓபன் பிரிவில் தெற்கு சூடான் வீரர் அஜக்கை வீழ்த்தி கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் ஐக்கிய அமீரக வீரருடன் மோதிய தமிழ்நாடு வீரர் குகேஷும் வெற்றி பெற்றுள்ளார்.
அதே போல், பொதுப் பிரிவில் இந்திய பி அணியும் பெண்கள் பிரிவில் 'இந்திய ஏ அணி (பெண்கள்)' அணியும் வெண்கலம் வென்றுள்ளன.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கடந்த 28ஆம் தேதி வண்ணமயமான தொடக்க விழாவுடன் தொடங்கின. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். வெளிநாட்டவரையும் கவரும் வகையில் மிக பிரம்மாண்ட ஏற்பாடுகள் இவ்விழாவில் செய்யப்பட்டிருந்தன. தொடக்க விழாவில், மத்திய மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருடன் இயக்குனர் விக்னேஷ் சிவன், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வைரமுத்து, கார்த்தி, உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 13 நாள்களாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று இரவு நிறைவு விழா கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.