சென்னை மாநகர மக்கள் இன்றும் நாளையு அம்மா உணவகங்களில் இலவசமாக உண்ணலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, சென்ன உள்ளிட்ட மாநிலத்தில் நான்கு வட மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 12 மாவட்டங்களில் கனமழை பொழியக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.


கலங்கிய சென்னைவாசிகள், நகர்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி


இதனால், ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தமிழக அரசு இயந்திரம் முழு வீச்சில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த ஆண்டைப் போல மீண்டும் பாதிக்கப்படுவோமோ என சென்னை வாசிகள் கலக்கத்தில் இருந்தனர். இந்த நிலையில்  சென்னைக்கான கனமழை மெல்ல நகர்ந்து, தற்போது ஆந்திர மாநிலத்தில் கொட்டி வருகிறது.


முழு வீச்சில் நிவாரணப் பணிகள்


எனினும் நேற்று கொட்டித் தீர்த்த வடகிழக்குப் பருவ மழையால் நிறைய இடங்கள் பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில், அனைத்து விதமான நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.






இன்றும் நாளையும் இலவசமாக உணவு


இந்த நிலையில் சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.