சென்னை நகரில் ஒரே நாளில் நேற்று 13.1 செ.மீ. மழை பெய்தபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிக பாதிப்பு ஏற்படவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் நேற்று காலை முதல் இன்று வரை 7.18 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர் ஒரே நாளில் அகற்றப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பொதுமக்களுக்கு ட்ரோன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள்


முன்னதாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ட்ரோன் மூலம் வழங்குவதற்கான சோதனை முன்னோட்டத்தினை ரிப்பன் கட்டட வளாகத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


வடகிழக்குப் பருவ மழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3
ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


இந்த ட்ரோன்களில் பால், பிரட் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல முடியும். மேலும், இந்த ட்ரோன்கள் 40 மீ. உயரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பறக்கும். இந்த ட்ரோன்களின் செயல்பாடுகள் சோதனை முன்னோட்டத்தின் அடிப்படையில் இன்று பரிசோதிக்கப்பட்டது.