வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், ,தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


 






 


இந்த கனமழைக்கு வரும் 9ம் தேதி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.இது, வட மேற்கு திசையில் நகர்ந்து நாளைக்குள் வடதமிழகத்தில் நோக்கி நகரக்கூடும். அதே நேரத்தில், கிழக்கு மத்திய அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது. இந்த இரண்டின் தாக்கம் காரணமாக, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன், மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 


மழையின் தீவிரத்தன்மை என்ன?


2015 கனமழைக்குப் பிறகு, நுங்கம்பாக்கத்தில் அதிகப்படியான மழை அளவு பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மட்டும் மயிலாப்பூரில் 226 மி.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 207 மி.மீட்டரும், அம்பத்தூரில் 205 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் விடிய, விடிய மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல தேங்கியுள்ளது. பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் மிக கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர்.






 


இது திடீர் கனமழையா?



இந்திய வானிலை ஆய்வு மையம் 


நேற்று, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன் அறிவிப்பு செய்திக்குறிப்பில்,  இந்த கனமழை குறித்த எச்சரிக்கை சமிக்ஞைகள் இடம் பெறவில்லை.






       


கடந்த 2 நாட்களாக, மழையின் தீவிரத்தன்மை குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது . நேற்று மதியம் 1 மணியளவில் வெளியிட்ட வானிலை குறிப்பில், " சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை, அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்." என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தாண்டி, தமிழ்நாடு வெதர்மேன், சென்னை ரயின்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள் சென்னை கனமழை தொடர்பான அறிவிப்பை தெரிவித்து வந்தன. 


முன்னெச்சரிக்கை நடவடிக்கை:  


மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தி நகர் போன்ற சென்னையின் மைய வர்த்த நகரங்களில் அதிகப்படியான மழை பொழிந்தது. இதன், காரணமாக, மீட்பு நடவடிக்கைகள் சிக்கலாகியுள்ளது. 


 






செம்பரம்பாக்கம் ஏரி இன்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளது. 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பாதுகாப்பாக தங்க வைக்க ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் வட்டாட்சியர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள புழல் எரி இன்று திறந்துவிடப்படுகிறது. இன்றைய நிலவரப்படி (07.11.2021) நீர் இருப்பு 19.30 அடியாகவும் (மொத்த உயரம் 21.20) கொள்ளளவு 2872(மொத்த கொள்ளளவு -3300) மில்லியன் கன அடியாகவும் உள்ளது. புழல் ஏரியின் நீர் வரத்து காலை 6.00 மணி நிலவரப்படி 1487 கன அடியாக உள்ளது. எனவே,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து இன்று பிற்பகல் 11.00 மணி அளவில் விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 


சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது


1913, 04425619206, 044 - 25619207, 044 - 25619208 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.


மேலும் 9445477205 என்ற வாட்ஸ் அப் மூலமும் புகாரை தெரிவிக்கலாம்