வெறும் 84 நாட்களில் சென்னை பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 






  


பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை கடந்த 34 ஆண்டுகளாக 100 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வந்தது. தற்போது அம்மருத்துவமனை 300 படுக்கைகள் கொண்ட கொரோனா  சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் பெரியோருக்கு 200 படுக்கைகளும், குழந்தைகளுக்கு 100 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.


 






சிறப்பு புறநோயாளிகள் பிரிவு:  


இம்மருத்துவமனையில் நோயாளிகளின் சிகிச்சைக்காக சிடி ஸ்கேன், உயர்ரக கருவிகள்கொண்ட நவீன ஆய்வுக்கூடம், நுண்கதிர் வீச்சகம், 6 KL கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க், ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய உயர்ரக மருத்துவ உபகரணங்களுடன் 10 படுக்கைகள் கொண்ட முழு அளவிலான தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைப் பிரிவு, 500 KVA கூடுதல் டிரான்ஸ்பார்மர், 250 KVA ஜெனரேட்டர் வசதி, குளிர்சாதன வசதி கொண்ட அறுவை அரங்குகள், நோயாளிகளின் விவரங்கள் உறவினர்கள் அறியும் வகையில் நவீன டிஜிட்டல் தகவல் பலகை, தாய் - சேய் நலன் காக்க ரத்த சேமிப்பு வசதிகளுடன் கூடிய சிறப்பு மகப்பேறு பிரிவு, குளிர்சாதன வசதி கொண்ட சிறப்பு வார்டுகள், சிறப்பு புறநோயாளிகள் பிரிவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகிய வசதிகள் உள்ளன.




மேலும், மருத்துவமனை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு, 24 மணிநேரமும் கழற்சிமுறையில் இயங்கும் புறகாவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திறப்பு விழா நிகழ்ச்சியில், அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் வகையில் எவர்வின் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


 



இந்த நிகழ்ச்சியில்,  பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.