சென்னையில் வெளுத்து வாங்கும் மழை
டிட்வா புயல் வலு குறைந்தாலும் சென்னையில் இன்று காலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 8 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளிகள் முடிவடைந்து மாணவர்கள் வீடுகள் திரும்பும் போது சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் சென்னையில் காலையில் இருந்து பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சென்னை மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூறுகையில், இன்று 01.12.2025 காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை சராசரியாக 68.26 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 129.90 மி.மீட்டர் மழைப்பொழிவும், குறைந்தபட்சமாக உத்தண்டி பகுதியில் 4.80 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
தயார் நிலையில் சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 111 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று (01.12.2025) 83,600 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நேற்று (30.11.2025) 20 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இன்று (01.12.2025) 77 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையை (NDRF) சார்ந்த 60 நபர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையை (SDRF) சார்ந்த 30 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் 170 எண்ணிக்கையில் 100Hp மோட்டார் பம்புகள், 550 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பம்புகள் உள்ளிட்ட பல்வேறு திறன் கொண்ட 1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. + 2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினிஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், உட்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
மரத்தை அகற்றும் பணி தீவிரம்
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2, கையடக்க மர அறுவை அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். புயல் மற்றும் மழையின் போது முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் ஆவின் பால் பவுடர் 1 இலட்சம் பாக்கெட்டுகளும், 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் பாமாயில் அடங்கிய தொகுப்பு 1 இலட்சம் எண்ணிக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.