சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று ரூ.5 கட்டணத்தில் பயணம் செய்யும் சிறப்பு சலுகை அமல்படுத்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது தான் மெட்ரோ ரயில்கள். குறுகிய காலத்திலேயே இங்குள்ள போக்குவரத்து சாதனங்களில் மிகவும் முக்கியமான இடத்தை மெட்ரோ ரயில்கள் பிடித்துள்ளது.  இதனால் பீக் ஹவர்ஸ் எனப்படும் பிஸியான நேரங்களில் சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினை ஓரளவு தீர்வை கண்டுள்ளது.


சென்னையில் இத்தகைய மெட்ரோ ரயில்கள் தற்போது 2 வழித்தடங்களில் இயங்கி வருகிறது. ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூருக்கு ஒரு வழித்தடத்திலும், விமான நிலையம் தொடங்கி விம்கோ நகர்  வரை மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருப்பவர்கள் தவிர்த்து வெளியூரில் இருப்பவர்களும் மெட்ரோ ரயில்களில் விரும்பி பயணிக்கின்றனர். 


இதனால் ஒவ்வொரு மாதமும் அதன் முந்தைய மாதங்களை ஒப்பிடும்போது மெட்ரோவில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். அக்டோபர் மாதத்தில் 85.50 லட்சம் பயணிகளும் பயணித்தார்கள். தொடர்ந்து நவம்பர் மாதத்தில் 80,01,210 பேர் பயணித்துள்ளனர். டிசம்பர் மாதமும் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் வீசிய மிக்ஜாம் புயலால் சென்னையில் மெட்ரோ ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது. பிற போக்குவரத்து சாதனங்களான பேருந்து, மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. 


விரிவுப்படுத்தப்படும் மெட்ரோ சேவை


மெட்ரோவை பொறுத்தவரை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தாமதமில்லாமல் சேவை வழங்கும் பொருட்டு நேரடியாக டிக்கெட் பெறுவது, மெட்ரோ கார்டு,  க்யு.ஆ.ர். குறியீடு (QR Code), வாட்ஸ் அப் மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அமலில் இருந்து வருகிறது. அதேபோல் நெரிசல் மிகுந்த நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் மாதவரம்-சிறுசேரி, பூந்தமல்லி-கலங்கரை விளக்கம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் இன்னும் சில ஆண்டுகளில் மெட்ரோ ரயில் சேவையானது தொடங்கப்பட உள்ளது. 


மெட்ரோ பயணிகளுக்கு ஆஃபர்


இதனிடையே  மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை (நிறுவப்பட்ட தினம்) முன்னிட்டு கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி மெட்ரோ ரயில்களில் ரூ.5 கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியானது. இதனை ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்துவார்கள் என நினைத்த நிலையில் மிக்ஜாம் புயலால் அது முடியாமல் போனது. இதனால் இந்த ஆஃபர் இன்று (டிசம்பர் 17) செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூ.ஆர். கோடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி மட்டுமே இதில் பயணிக்க முடியும்.


மேலும் சிங்கார சென்னை அட்டை, மெட்ரோ பயண அட்டை, சி.எம்.ஆர்.எல். மொபைல் ஆப் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூ.ஆ.ர். ஆகிய பயணச் சீட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.