தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடி கிராமத்தில் உள்ள ஊரணி குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் போலீஸ் சரகம் மருதகுடி கிராமத்தில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் ஊரணி குளம் உள்ளது, சுமார் 15 அடி ஆழத்திற்கும் மேல் உள்ள இந்த குளத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோயில் திருவிழா நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் மாதவன் (10). செந்தில் என்பவரின் மகன் பாலமுருகன் (10 ). ஸ்ரீதர் என்போரின் மகன் ஜஸ்வந்த் (8) ஆகிய மூன்று பேரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். இதில் மாதவன், பாலமுருகன் இருவரும் 5ம் வகுப்பும், ஜஸ்வந்த் இரண்டாம் வகுப்பும் படித்து வந்தனர். வீட்டில் இருந்தவர்களிடம் எதுவும் கூறாமல் வெளியில் வந்து விளையாடிய 3 பேரும் பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள கிராமமான மருதகுடிக்கு வந்துள்ளனர். தொடர்ந்து அங்குள்ள ஊரணி குளத்திற்கு வந்துள்ளனர்.
மாலை நேரம் என்பதால் குளம் உள்ள பகுதியில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குளத்தில் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 குளத்தில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். இந்த குளத்தில் ஆழம் அதிகம் இருப்பது தெரியாமல் அடுத்தடுத்து மூன்று பேரும் நீரில் மூழ்கி உள்ளனர். அப்பகுதியில் மக்கள் யாரும் இல்லாததால் இவர்கள் குளத்தில் குளித்ததையோ அல்லது மூழ்கியதையோ யாரும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் வெகு நேரம் ஆகியும் மாதவன் உட்பட மூணு பேரும் வீட்டிற்கு வராததால் அவர்களின் பெற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். அப்பொழுதுதான் அவர்கள் மருதகுடி கிராமத்திற்கு சென்றதாக தகவல் கிடைத்து அங்கு சென்று பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். அப்போது ஊரணி குளத்தின் கரையில் சிறுவர்கள் அணிந்திருந்த செருப்புகள் கிடந்ததை கண்டு பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் குளத்தில் இறங்கி குளித்து இருக்கலாம் என்று தெரிய வந்தது.
உடன் அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தபொழுது மூன்று சிறுவர்களும் குளத்தில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது. உடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவர்களை ஏற்றி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த வல்லம் டிஎஸ்பி கணேஷ்குமார் மற்றும் வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குளத்தில் ஆழம் அதிகமாக இருந்துள்ளது. குளிப்பதற்காக இறங்கிய சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் மூழ்கி இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர்.