இறுதி கட்டத்தை எட்டிய வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நீடித்து வருகிறது. எனவே இனி மழைக்கான வாய்ப்பு குறைவு என வானிலை ஆய்வாளர் தெரிவித்து வரும் நிலையில், இதனை வானிலை ஆய்வு மையமும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 21-12-2025 முதல் 24-12-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் மழை
வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 26-12-2025 மற்றும் 27-12-2025 தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
21-12-2025 முதல் 25-12-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4" செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
21-12-2025 மற்றும் 22-12-2025: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
நாளை (22-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:21-12-2025 மற்றும் 22-12-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:21-12-2025 மற்றும் 22-12-2025: மத்தியமேற்கு- தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.