கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 26ஆம் தேதி வரை தமிழ் நாட்டில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ் நாட்டில் குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அடனை ஒட்டிய பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னை ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, கிண்டி, ஆலந்தூர், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 


23.01.2023: தமிழ் நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு   இடங்களில்   லேசான  /   மிதமான மழை   பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. 


24.01.2023: தென் தமிழ் நாடு மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு   இடங்களில்   லேசான /   மிதமான மழை   பெய்யக்கூடும். 


25.01.2023 மற்றும் 26.01.2023: தமிழ் நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு   இடங்களில்   லேசான  /   மிதமான மழை   பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


 23.01.2023: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.