காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்கவும் நேரிடும் என தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் விசாரித்து வருகிறார்.டிஜிபி கடந்த வாரம் தாக்கல் செய்த அறிக்கையை பார்த்த நீதிபதி, ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த  வரவேற்கத்தகது என்று கடந்த முறை பாராட்டு தெரிவித்திருந்தார்.

 



அந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையையும், கண்ணியத்தையும் உறுதிபடுத்தும் வகையில், எந்த பணிக்காக நியமிக்கப்பட்டார்களோ அந்த பணியை மட்டும் வழங்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார். ஆர்டர்லி ஒழிப்பு முறை குறித்த 1979ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை பின்பற்றி, ஆர்டர்லிகளாக உள்ள காவலர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும் என்றும், அலுவலக உதவியாளர் அல்லது இருப்பிட உதவியாளர் பணிகளை உருவாக்கும்படி தமிழக அரசுக்கு பரிந்துரை வைக்கலாம் என டிஜிபி-க்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

 



 

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், ஆர்டர்லிகளை பயன்படுத்துவதில்லை என மேலும் 265 அதிகாரிகள் உத்தரவாதம் வழங்கியுள்ளதாக தெரிவித்ததுடடன், முதலமைச்சர் நடத்திய கூட்டத்தை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளும் கூட்டங்களை நடத்தி உள்ளதாகவும், ஆர்டர்லி ஒழிப்பு முறையில் உயர் நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

 

பின்னர் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், 1979ஆம் ஆண்டு அரசாணைப்படி ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமெனவும், ஓய்வுபெற்ற அதிகாரிகள் வீடுகளில் உள்ள  ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும் தமிழக அரசு மற்றும் டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளார்.ஆர்டர்லிகள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

 

காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருபவர்களை கண்டறியவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்கிற மனுதாரர் யு.மாணிக்கவேலின் கோரிக்கை குறித்து தமிழக அரசை அணுகும்படியும் அறிவுறுத்தி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளார்.