சென்னையில் இரவு முழுவதும் தொடர் மழை பெய்ததோடு தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று (19.06.23) பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட், வேலூர் ஆகிய மாவட்டத்திலும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிபேட், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறுச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன் தினம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை ஒரு மினி ஊட்டியாக மாறியுள்ளதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வெயில் வாட்டி வதைத்த நிலையில் மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், வேப்பேரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலில் இருந்து மேகக்கூட்டங்கள் வருவதை ஒட்டி கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த மழையானது அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லிமீட்டரில்):


மீனம்பாக்கம் (சென்னை) 137.6, நுங்கம்பாக்கம் (சென்னை) 67.4, கடலூர் கடலூர் 28.0, காரைக்கால் 23.0, புதுச்சேரி 18.0, வால்பாறை (கோயம்புத்தூர்) 8.8, கொடைக்கானல் (திண்டுக்கல்) 7.0, நாகப்பட்டினம் 6.0, பரங்கிப்பேட்டை (கடலூர்) 6.0, வேலூர் 2.0, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 2.0, திருத்தணி (திருவள்ளூர்) 2.0 மிமீ மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மீனமபாக்கத்தில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஜூன் மாத்ததில் அதிக மழை பதிவு என்பது இதுவே ஆகும். 


27 ஆண்டுகளுக்கு பின் ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 100 மிமீ கடந்து மழை பதிவாகியுள்ளதாகவும், மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.