சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியைக் காணச் சென்ற மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நிகழ்ச்சியைக் காணும்போதே மயக்கம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.


முன்னதாக கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த ஜான் என்பவர், நிகழ்ச்சியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அதேபோல பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன், தினேஷ் குமார் ஆகியோரும் உயிரிழந்தனர்.


சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ்


சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் 108 பேர் வெயில் தாக்கம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.


4 பேர் உள் நோயாளியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், 60 வயது மதிக்கத்தக்க ஜான் உயிரிழந்துள்ளார். 9 பேர் நீர் சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 30 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சைக்குப் பிறகு ராயப்பேட்டை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்நோயாளிகள் யாரும் இல்லை, அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சில உடல் நலக் குறைபாடுகள் காரணமாக உள்நோயாளிகளாக இருந்த இருவர், இருவரும் சீராக உள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்ன நடந்தது?


சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சிக்கு முன்னதாக, போலீஸாரும் சென்னை மாநகராட்சியும் இணைந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர். காலை 7 மணி முதலே நிகழ்வு நடைபெறும் இடத்தில் குவிந்தனர். பார்க்கிங் வசதி தனியாக பல்வேறு சாலைகளில் செய்யப்பட்டு இருந்தது.


காலையில் முறையான திட்டமிடல் செய்யப்பட்டிருந்த நிலையில், மக்கள் கூட்டம் கட்டுக்குள் இருந்தது. மக்களும் வெவ்வேறு நேரங்களில் கடற்கரைக்கு வந்ததால், காவல் துறையினர் கட்டுப்படுத்துவதும் எளிதாக இருந்தது.


எனினும் நிகழ்ச்சி முடிந்த பிறகு எல்லா மக்களும் ஒரே நேரத்தில் வெளியே வரத் தொடங்கினர். கடற்கரையில் இருந்து காமராஜர் சாலைக்கு வர வெவ்வேறு வழிகள் இருந்ததால், அனைத்து வழிகளிலும் மக்கள் கூட்டம் சாரை சாரையாகப் படையடுத்தது. இதனால் ஏற்கெனவே வந்த கூட்டத்துடன் புதிதாக வந்தவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்தது. திரும்பச் செல்லும்போது போலீஸார் யாரும் போக்குவரத்தை ஒருங்கிணைக்காததால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் தள்ளுமுள்ளாக மாறியது. இதில் ஏராளமான பொதுமக்கள் மாட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாம்: 'ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் டெட்' கதை; விமான சாகசத்துக்குப்பின் கடும் நெரிசல்..