New Medical Colleges In Tamilnadu: மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து, புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகள் தமிழ்நாட்டில் விரைவில் தொடங்க உள்ளன.


6 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி:


தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டன. இது பெரும் சாதனையாக கருதப்பட்டது மற்றும் பல ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் பெரும் வாய்ப்பாகவும் கருதப்பட்டது. இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் மேலும் 6 புதிய மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு அனுமதி  அளித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ள அனுமதியின்படி,  மயிலாடுதுறை, திருப்பத்தூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. அதைதொடர்ந்து, பெரம்பலூர், அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டையில் இரண்டாவது கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் பங்களிப்போடு அமைக்கப்படும் இந்த மருத்துவ கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மத்திய அரசுடன் ஆலோசனை:


தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த மே 6-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அதைதொடர்ந்து, தமிழ்நாட்டில் புதியதாக 6 மருத்துவ கல்லூரிகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் மருத்துவ உட்கட்டமைப்பு மேலும் வலுவடைய உள்ளது. அதோடு, உயர்சிகிச்சைக்காக கிராமப்புற மக்கள், சென்னை போன்ற பெருநகரங்களை நோக்கி ஓடும் அலைச்சலும் குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


தமிழ்நாட்டில் மருத்துவ உட்கட்டமைப்பு:



தமிழ்நாட்டில் அரசுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5,225 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 3,300 இடங்களும் இருக்கின்றன. மாநிலத்தின் மக்கள் தொகையைப் பொறுத்தவரை, 2011-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்போது 7 கோடியே 21 லட்சமாக இருந்தது, தற்போது சுமார் எட்டு கோடியை கடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளின்படி, தற்போது தமிழ்நாட்டில் சுமார் 8,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் வரை இருக்கலாம். ஆனால், தற்போதே அந்த எண்ணிக்கை 8,500-ஐ தாண்டிவிட்டது. 



இதனிடையே, குறிப்பிட்ட அளவுக்கு மேல் மருத்துவ இடங்களைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி கிடையாது என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. இதனால், தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் இனி தொடங்க முடியாது என கூறப்பட்டது. இந்நிலையில் தான் தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளால் மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.