தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்திய அளவில் பல மாநிலங்களில் தங்களது கட்சியை வளர்த்து நிலை நாட்டி இருக்கும் சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் பாரதிய ஜனதா கட்சியால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கட்சி வளர்ச்சி அடையவில்லை. இதனை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தமிழ்நாட்டில் தங்கள் கட்சியை கூட்டணி கட்சிகளின் ஆதரவின்றி தனித்து தனித்துவத்துடன் கொண்டுவர முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்கிய பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு, அவர் வகித்த தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் பதவியினை காவல்துறை அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலைக்கு வழங்கியுள்ளது. மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை தமிழ்நாட்டில் கட்சியினை பெரிய ஒரு அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதனை அடுத்து பல்வேறு திட்டங்களையும் வியூகங்களையும் மத்திய பாரதிய ஜனதா கட்சி வகுத்து வைத்துள்ளதாகவும், முதற்கட்டமாக "இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" என தலைப்பிட்டு ஒரு திட்டத்தினை கட்சியை வளர்ப்பதற்காக கட்சியினரிடையே அறிவித்துள்ளனர்.




அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில செயலாளர் தங்க.வரதராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் செல்லிடப்பேசி ஒட்டு கேட்கப் படுவதாகவும், கூட்டுறவுத்துறை அமைச்சகம் தொடங்கியதை குறைகூறியும், பெட்ரோல், டீசல், விலை உயர்வை காரணம் காட்டியும் மக்களவை கூட்டத்தொடரை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்புகின்றனர்.




அலைபேசி ஒட்டுகேட்பது எல்லாம் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். சிதரம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது பிரணாப் முகர்ஜியின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டது. மோடி அமைச்சரவை விஸ்தரிப்பில் பட்டியல் இனத்தை சேர்தவர்கள் அமைச்சராக இருக்கின்றனர். தகுதியானவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் மென்பொருளை இந்தியாவிற்கு விற்பனை செய்யவில்லை என்று இஸ்ரேல் நிறுவனம் வெளிப்படையாக அறிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான மென்பொருள் உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை வெளிநாட்டில் இருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மாநில அரசுக்கும் பங்கு உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க 5 ரூபாயை குறைப்போம் என்றதை ஏன் குறைக்கவில்லை. நீட் தேர்வு கட்டாயம் தேவை என்பதில் பாஜக தெளிவாக உள்ளது. திமுக தமிழக மக்களை ஏமாற்றுகிறது என்றும், 2010-ஆம் ஆண்டு நீட் மசோதா சட்டம் நிறைவேற்றியபோது காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக தனது ஆதரவை வாபஸ் பெற்றிருந்தால் நீட் மசோதா நிச்சயம் நிறைவேறி இருக்காது என்றார்.