கடந்த திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்தது பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பு வகித்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக பொறுப்பு வகிப்பவரை சாலையில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.

Continues below advertisement

சிபிஐ வசம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:

இந்த கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த திமுக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த சூழலில், ஆட்சிக்கு வந்த தவெக அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஏதுவாக கடந்த திமுக அரசு மேல்முறையீடு செய்த மனுவை தவெக அரசு வாபஸ் பெற முன்வந்துள்ளது. இதனால், விரைவில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ வசம் செல்ல உள்ளது.

சிக்கப்போகும் முன்னாள் அமைச்சர்?

சிபிஐ வசம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்கு சென்றால், இந்த வழக்கில் பல்வேறு திருப்புமுனைகள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இந்த கொலை அரங்கேறியது முதலே முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயர் மிக அதிகளவு அடிபட்டது. அவரது தூண்டுதலின் பெயராலே அந்த கொலை அரங்கேறியதாகவும் ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. 

Continues below advertisement

பீதியில் தேசிய கட்சி தலைவர்?

அந்த முன்னாள் அமைச்சர் மட்டுமின்றி பிரபலமான தேசிய கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரும் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியது. தற்போது சிபிஐ வசம் இந்த வழக்கு சென்றால் அவர்கள் இருவரும் மிகப்பெரிய சிக்கலில் சிக்குவார்கள் என்று கருதப்படுகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் சிறைக்குச் செல்வதற்கான வாய்ப்புகளும் பிரகாசம் என்றும் கூறப்படுகிறது.

இதனால், அந்த முன்னாள் அமைச்சரும், தேசிய கட்சியின் முக்கிய தலைவரும் கடும் பீதியில் உறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், ஒருவேளை வழக்கின் விசாரணை தங்களுக்கு எதிராக திரும்பினால் என்ன செய்யலாம் ? என்று அவர்கள் தங்களது சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

தவெக அரசு மீது எதிர்பார்ப்பு:

இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறைக்கு அனுப்பினால் தவெக அரசுக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தவெக அரசு ஒத்துழைத்ததற்கு திரைப்பட இயக்குனரும், உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு நெருக்கமானவருமான பா.ரஞ்சித் விஜய்க்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.