நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம்  தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 கோடி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என தெரிய வந்தது. இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு தாம்பரம் போலீசார் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி சம்மன் அனுப்பப்பட்டது.  இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க பத்து நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தாம்பரம் காவல்துறை அலுவலகம் சார்பில் இரண்டாவது முறை சம்மன் அனுப்பப்பட்டது.


அதன்பின் இந்த வழக்கு சிபிசிஐடி –க்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் சிபிசிஐடி அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். பின் நயினார் நாகேந்திரன் உறவினர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. முருகன் மற்றும் முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி ஆகிய இரண்டு பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.


இந்நிலையில் நாளை மறுநாள் சிபிசிஐடி அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வழக்கில் தமிழ்நாடு பா.ஜ.க. அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பா.ஜ.க. தொழில் பிரிவு துணைத்தலைவர் கோவர்த்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோரும் நாளை மறுதினம் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.