சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி நேரடி விசாரணையை தொடங்கியது. விசாரணையை துரிதப்படுத்த டிஜிபிக்கு உத்தரவிடுமாறு சி.வி. சண்முகம் வழக்கு தொடர்ந்த நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 


கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பி.எஸ். ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார்.

 

அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


சி.வி.சண்முகம் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுக அலுவலக கலவரம், சூறை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும்  இதுவரை விசாரணையை தொடங்கவில்லை எனவும், குற்றச் செயல் நடந்த இடத்திற்கு வந்து பார்வையிடாதது அதிர்ச்சியளிப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

 

மேலும், கடுமையான குற்றங்கள் இருந்தபோதிலும், விசாரணையைத் தொடங்குவதில் சிபிசிஐடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பகல் நேரத்தில் கேமராக்களுக்கு முன்பாகவும், கதவுகளை உடைத்தும் கொள்ளையடித்த நபர்கள் மீது தெளிவான ஆதாரம் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். 


திருடப்பட்ட பொருட்களை மீட்பதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மேலும், தெளிவான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருந்தும் குற்றச் செயல் நடந்த இடத்தை புலனாய்வுக் குழு பார்வையிடாததால், பிரதான எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறி, இதனால் ஆளும் ஆட்சிக்கு நன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

 

தமிழக காவல்துறை முறையான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று தான் தன்னிச்சையான விசாரணை குழு கேட்டதாகவும், முறையாக விசாரணை நடத்தாமல், காவல்துறை ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவது என்கிற தனது குற்றச்சாட்டுக்கு அதன் செயல்பாடின்மையே சான்றாக உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

 

அதன்படி, ஜூலை 11ஆம் தேதி அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில், ராயப்பேட்டை அலுவலகத்தில் DSP வெங்கடேசன் தலைமையிலான CBCID போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.  வழக்கில் ஓபிஎஸ் முதல் எதிரியாகவும் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் அடுத்ததடுத்த எதிரிகளாகவும் FIRல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணைக்கு பிறகு OPS உள்ளிட்டோருக்கு சம்மன் அளித்து விசாரிக்க போலீசார் முடிவு வழக்கை துரிதப்படுத்த டிஜிபிக்கு உத்தரவிடக்கோரி சிவி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், விசாரணை நடைபெறுகிறது