C.P.Radhakrishnan: ’மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன்‌’ - சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று உத்தரவிட்டார்.

Continues below advertisement

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 13 மாநிலங்களுக்கான ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியில் இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.பி.ராதாகிருஷ்ணன், “தமிழகத்திற்கு மீண்டும் ஒரு ஆளுநரை குடியரசு தலைவரும், பிரதமரும் கொடுத்துள்ளனர். இது தமிழினத்தின் மீதும், பாரம்பரியம் மீதும், கலாச்சாரம் மற்றும் தமிழ் மக்கள் மீதும் எத்தகைய அன்பும் பாசமும் வைத்துள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக உள்ளது. 

Continues below advertisement

பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும்  ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மக்களின் உயர்வுக்கும் முன்னேற்றத்திறக்கும் என்னென்ன வழியில் ‌செயல்பட முடியுமோ அதை மனதில் வைத்து பணியாற்றுவேன். இது எனக்கு கிடைத்த பெருமையாக பார்க்கவில்லை. தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன். மோடிக்கும் குடியரசு தலைவருக்கும் தமிழ் மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக இதை பார்க்கிறேன். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன்‌” எனத் தெரிவித்தார்.

தலைவர்கள் வாழ்த்து:

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சிபி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் எனவும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

இவரை தொடர்ந்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது, ”ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜகவின் மூத்த தலைவரும்,நான் பெரிதும் போற்றும் அண்ணன்,சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அன்பிற்குரிய அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மன மகிழ்ச்சி அளிக்கிறது. அவரின் தேச நலப் பணிகள் மென்மேலும் சிறக்க மனமார வாழ்த்துகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சி.பி. ராதாகிருஷ்ணன்:

65 வயதான சி.பி. ராதாகிருஷ்ணன் கடந்த 1957ம் ஆண்டு  அக்டோபர் 20ம் தேதி திருப்பூரில் பிறந்தார். தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த இவருக்கு இளம் வயது முதலே அரசியலில் ஆர்வம் தொற்றிக்கொண்டது. அதோடு, தேசிய கொள்கைகளில் ஆர்வம் கொண்ட இவர், 1973ம் ஆண்டு முதலே ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்கத்தில் இணைந்து பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட தொடங்கினார். பின்னர் பாஜகவில் சேர்ந்து கடுமையாக உழைத்து படிப்படியாக உயர்ந்து, அக்கட்சியின் மாநில தலைவர் பொறுப்பை வகித்தார். 1998 கோவை குண்டு வெடிப்பிற்கு பிறகு 1998 மற்றும் 1999 பொதுத்தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராக சி.பி. ராதாகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார். அதோடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவர் பதவியை கடந்த 2016 முதல் 2019ம் ஆண்டு வரை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement