தர்மபுரி மாவட்டம் மாரண்டள்ளி அருகே தொட்டபடகாண்ட அள்ளிகிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். 32 வயதான அவர் அந்த பகுதியில் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவருக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரைச் சேர்ந்த 22 வயதான லட்சுமி என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.


இருவருக்கும் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வஜ்ஜிரபள்ளம் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. காலை 6 மணி முதல் 7.30 மணி சுபமுகூர்த்த நேரத்தில் திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டிருந்ததால், பெண் வீட்டார் அனைவரும் மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு சென்றுள்ளனர். ஆனால், அங்கே சென்றால் மணமகன் குடும்பத்தாரோ, மணமகன் உறவினர்களோ யாரும் இல்லாததை கண்டு மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.




இதனால், பதற்றத்துடன் மணமகன் வீட்டிற்கு மணமகள் வீட்டினர் நேரில் சென்று பார்த்தனர். அப்போது, அங்கு மணமகன் சரவணன் மதுபோதையில் மயங்கிக்கிடந்துள்ளார். இதைக்கண்ட திருமண வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மணமகள் வீட்டார் மிகவும் அதிருப்தி அடைந்தனர். மணமகன் வீட்டார் மணமகன் சரவணனை போதையில் இருந்து எழுப்பினார்.


போதையில் இருந்த தெளிந்த மணமகன் சரவணன், இனிமேல் குடிக்க மாட்டேன். மணமகளை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், ஆத்திரமடைந்த மணமகள் இனிமேல் இந்த திருமணம் வேண்டாம் என்று மாலையை கழற்றி வீசியுள்ளார். மேலும், மணமகள் வீட்டார் இந்த திருமணம் வேண்டாம். திருமணத்திற்கான செலவுகளை உடனே திருப்பித்தர வேண்டும் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.




காவல்நிலையத்தில் மணமகன் சரவணன் தான் செய்தது தவறு என்றும், இனிமேல் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டேன், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். ஆனால், திருமணத்தன்றே இவ்வாறு குடிப்பவர், திருமணத்திற்கு பிறகு திருந்த வாய்ப்பில்லை என்று கூறி சரவணனை திருமணம் செய்ய மணமகள் லட்சுமி மறுத்துவிட்டார். போதையால் தனது திருமணமே நின்றுபோன வேதனையில் மணமகன் சரவணனை காவல்துறையினர் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண