அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் வரை மிகை ஊதியம் எனப்படும் போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


போனஸ் அறிவிப்பு:


பொங்கலை முன்னிட்டு போனஸ் வழங்குவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசின் நல திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


இதன்படி, 'சி' மற்றும் 'டி' பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.


தொகுப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து, சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.




 "சி" மற்றும் 'டி” பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசு வழங்கப்படும். 


மேற்கூறிய மிகை ஊதியம் / பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசுக்கு 221 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பான அறிவிப்பை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ( நிதித்துறை ) வெளியிட்டுள்ளார்.


Also Read: Pongal 2023 Gift: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000.. பொங்கல் பரிசு கிட்டில் என்னென்ன? அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..