தமிழ்நாடு முழுவதும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணனும் மாற்றப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 


ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மாற்றம்


சிட்கோ இயக்குநர் மதுமதி ஐ.ஏ.எஸ் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த குமர குருபரன் சென்னை மாநகர ஆணையர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.


அதேபோல தகவல் தொழிநுட்பத் துறைச் செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம், ராணிப்பேட்டை, அரியலூர் ஆட்சியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின்போது ஆட்சியராக இருந்த ஷர்வன் குமார் ஜடாவத், நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இணை செயலாலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ஆட்சியர்கள் இட மாற்றம்


ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் துறை இயக்குநராக இருந்த சந்திரலேகா ஐஏஎஸ், ராணிப்பேட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி ஆட்சியர் அருணா ஐஏஎஸ், புதுக்கோட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். லட்சுமி பவ்யா ஐஏஎஸ் தன்னீரு நீலகிரி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தஞ்சாவூர் ஆட்சியராக பிரியங்கா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐஏஎஸ்-உம் அரியலூர் ஆட்சியராக ரத்தினசாமி ஐஏஎஸ்-உம் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அதேபோல கடலூர் ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில் குமார் என்பவரும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக அழகுமீனா ஐஏஸ்ஸும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக சிம்ரன் ஜீத் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ஐஏஎஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுக்கான இட மாற்ற உத்தரவுகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.