நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் மதிய சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை மேம்படுத்தும் வகையில், அரசுபள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்களிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதோடு, பள்ளிகளில் இடை நிற்றலை குறைக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக காலை உணவு திட்டம் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்திற்கு, பொதுமகக்ளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 


2024ல் விரிவுபடுத்தப்படும்:


இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இனி காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் எனஅறிவித்துள்ளார். இதுதொடர்பான பேச்சில்,  ”காலைச் சிற்றுண்டி சாப்பிடும் குழந்தைகள் மற்றும் கட்டணமில்லாப் பேருந்து பயணம் செய்யும் மகளிரின் முகங்களில் நித்தமும் காலையில் உதயசூரியன் உதிக்கிறது அல்லவா இதுதான் இந்த ஆட்சியினுடைய மாபெரும் சாதனை. பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, கல்லூரியில் படிக்கும் இளைஞர்களை மட்டுமின்றி,  படிக்க வராமல் இடையில் நின்று விடக்கூடியவர்களையும் பள்ளி, கல்லூரிகளுக்குள் அழைத்து வருகிறோம். 2023 – 2024 ஆம் நிதியாண்டில் இருந்து காலை உணவு திட்டம் தமிழக முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்”, என கூறினார்.


முதலமைச்சர் பெருமிதம்:


தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “ 'முதலமைச்சரின் முகவரி' திட்டத்தில் உள்ள சிஎம் ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்பவர்கள், பெரும்பாலும் தங்களது தேவைகளை, கோரிக்கைகளை, புகார்களை பதிவு செய்வதற்காகத்தான் பேசுவார்கள். ஆனால், சில வாரங்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த தீபாராணி என்பவர்  தொடர்பு கொண்டபோது, 'உங்களுடைய புகார் என்னம்மா?' என்று கேட்டதும், 'புகார் சொல்வதற்காக நான் போன் செய்யவில்லை, முதலமைச்சரின் தொலைபேசி எண் என்னிடம் இல்லை. அவருக்கு நன்றி சொல்வதற்காக போன் செய்தேன்' என்று கூறினார். மேலும், நான் காய்கறி வியாபாரம் செய்கிறேன். அதனால் என் பிள்ளைக்கு காலையில சாப்பாடு கொடுக்க முடியாது. என் மகன் ஐந்தாவது படிக்கிறான். இப்போது, காலை உணவுத் திட்டத்தின் மூலமாக அவனுக்கு தினமும் காலை உணவு கிடைத்து விடுகிறது, அது தரமானதாக இருக்கிறது. அதனால முதலமைச்சருக்கு நன்றி சொல்லணும்" என்று அந்தத் தாய் நெகிழ்ச்சியோடு கூறியதுதான் எனக்குக் கிடைத்த பாராட்டு என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


சொல்லாமலும் செய்வோம் - முதலமைச்சர் ஸ்டாலின்


தொடர்ந்து, இதுபோன்று ஏராளமான எளிய மக்களின் பாராட்டு மற்றும் வாழ்த்துகளின் காரணமாகத் தான் பெருமை அடைந்து ஊக்கத்தோடு பணியாற்றுகிறோம். 'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்' இது தலைவர் கருணாநிதி முழக்கம். அதோடு, தமிழ் மக்களின் நலன் என்று வந்துவிட்டால், சொல்லாததையும் செய்வோம். ஏன்? சொல்லாமலும் செய்வோம் என்பதுதான் எங்கள் முழக்கம் என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.