விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே தவசிலிங்க புரத்தில் 400 ஆண்டுகள் பழமையான வில் வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 


 

 

சங்ககால தொடக்கத்திலிருந்து தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை ஒரு முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. குறிப்பாக மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட போர் , பூசல் காரணமாக இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நட்டு வழிபடும் முறை இருந்துள்ளது. "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்பார், வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத வள்ளுவர். இதன் பொருள் என்ன? சிறப்பாக வாழ்ந்தவர் தெய்வத்துக்குச் சமமாக வணங்கப்படுவார் என்பதுதான். அதனை மெய்ப்பிக்கும் வகையில், நடுகல், உருவம், நினைவுத்தூண், வீரன்கல், சுமைதாங்கிக் கல் எனப் பல உருவங்களில்,  பல வகைகளாக, மாண்டவர்களையும் தியாகிகளாகப் போற்றிய கலாசாரம் தமிழருடையது. அதாவது, தமிழர்கள் ஆதியில் தன்னுடைய முன்னோர்களையே வணங்கி வந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடையாளமாக எழுந்தவைதான் நடுகல் வழிபாடு. இந்த நடுகல்லே நாளடைவில் குலதெய்வமாக வழிபாடுசெய்யப்படுகிறது. 

 

 



 

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட  ஆமத்தூரில் இருந்து செங்குன்றாபுரம் செல்லும் வழி தவசிலிங்கபுரத்தில், தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் து .முனீஸ்வரன் தலைமையில் பேராசியர்கள் முனைவர் லட்சுமண மூர்த்தி முனைவர் ஆதிபெருமாள் சாமி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்ட போது ஊரணியின் உட்பகுதியில் வில்லை ஏய்ந்த நிலையில் வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 




 

இந்த சுவாரஸ்யமிக்க நடுகல் குறித்து  முனீஸ்வரன் நம்மிடம்,"  தவசிலிங்கபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகல் 2 ½ அடி உயரமும் 1 ½ அடி அகலமும் இருந்தது. வீரனின் உருவ அமைப்பில் இடது கையில் வில்லை பிடித்தபடியும் வலது கையில் வில் அம்பு ஏய்தாவாறும் காட்சி தருகின்றான். வீரன் காலில் வீரக்கழலும் இடுப்பில் கச்சையுடன் கூடிய குறுவாளுடனும் நீண்ட காதுகள், இடது புறம் சற்று சரிந்த கொண்டையுடனும் நின்றவாறு காட்சி தருகிறான். இச்சிற்பத்தின் மேல்பகுதி  நாசிக்கூடு கொண்ட தோராணை வளைவுடன் புடைப்பு சிற்பமாக வில் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

 

 



 

இச்சிற்பத்தை ஆய்வு செய்யும்போது இப்பகுதியில் வில் வித்தையில் புகழ் பெற்று இறந்த போர் வீரனின் நினைவை பறைசாற்றுவதற்காக எழுப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். இதன் காலம் கி.பி - 17 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. தற்போது மக்கள் மாலைக்கோவில் என்று பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர் என்றார்.