காங்கிரஸ் கட்சியில் எப்போது பார்த்தாலும் எல்லாவற்றுக்கும் சண்டை, அதில் தொண்டர்கள் அளவுக்கு தலைவர்களும் இருப்பார்கள் என பலரும் கூறுவதுண்டு. சட்டப்பேரவை தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி வாகை சூடியது. ஆனால், இன்னும் சட்டப்பேரவை குழு தலைவரை தேர்வு செய்ய முடியாமல் திக்கி திணறி வருகிறது.


 



பொதுவாகவே காங்கிரஸ் என்றால் கோஷ்டி, கோஷ்டி என்றால் காங்கிரஸ் என்ற விமர்சனம் இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது சட்டப்பேரை குழு தலைவரை தேர்ந்தெடுத்தப்பின்னும் காங்கிரஸ் கட்சியில் மட்டும் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. சட்டமன்ற தலைவர் யார் என்பதை முடிவு செய்ய சோனியாகாந்திக்கு அதிகாரம் அளித்து கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்பி வைத்தபோதும், இதுவரை யார் குழு தலைவர் என்பதை அறிவிக்காமல் காங்கிரஸ் தலைமையும் காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் குழு தலைவராக விஜயதரணி, பிரின்ஸ், முனிரத்தினம், செல்வபெருந்தகை இடையே நான்குமுனை போட்டி நிலவி வருகிறது.




தான் தொடர்ந்து மூன்றாவது முறை எம்.எல்.ஏ என்பதாலும், ஏற்கனவே காங்கிரஸ் கொறடாவாக பணியாற்றியதாலும், கட்சிக்காக களத்தில் இறங்கி உழைக்கும் பெண் என்பதாலும் தனக்கு குழு தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று விஜயதரணி மல்லுக்கட்டி வருகிறார்.



காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரியின் குட் புக்கில் இடம்பிடித்துள்ள சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ முனிரத்தினமும் சட்டமன்ற குழு தலைவர் பதவியை பெற கடும் பிரயத்தனம் செய்து வருகிறார். பாஜகவை பொறுத்தவரை மாநில தலைவராக பட்டியலினத்தை சேர்ந்த முருகன் செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கடந்த 40 வருடங்களாக பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் தலைவர்களாக நியமிக்கப்படாததால், காங்கிர சட்டமன்ற குழு தலைவராக தன்னை நியமித்து பட்டியலினத்திற்கு பிரதிநிதித்துவத்தை தரவேண்டும் என்று ஸ்ரீபெரும்பதூர் எம்.எல்.ஏவான செல்வபெருந்தகை கட்சி தலைமையிடம் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், தான் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழு தலைவராக செயல்பட்ட அனுபவம் உள்ளது என்பதையும் அவர் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார்


.


இவர்கள் மூவரையும் தவிர்த்து சட்டப்பேரவை குழு தலைவர் ரேசில் இருக்கும் இன்னொருவர், மூன்றாவது முறையாக குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் பிரின்ஸ். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய கடந்த 12ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் பேச  வாய்ப்பளிக்கப்பட்ட ஒரே நபர் என்பதாலும் சீனியர் என்ற அடிப்படையிலும் தனக்கு இந்த முறை சட்டப்பேரவை தலைவர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.



காங்கிரசை பொறுத்தவரை சட்டப்பேரவை குழு தலைவர் என்பது கிட்டத்தட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கு நிகரானது. எந்த கூட்டணி பேச்சுவார்த்தையானாலும், கட்சித் தலைமை ஆலோசனை கூட்டமானாலும், சட்டப்பேரவை குழுத் தலைவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதே போல் விரிஅவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை இறுதி செய்யும் குழுவிலும் சட்டமன்ற குழுத்தலைவர் இடம்பெறுவார். அதனாலேயே சட்டமன்ற குழு தலைவர் பதவியை பெற காங்கிரஸ் கட்சியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் யாரை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குழு தலைவராக சோனியாகாந்தி நியமிக்க போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. அதற்கான விடை விரைவில் தெரியவரவும் உள்ளது.