கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தகரக் கொட்டகையில் தரையில் கிடத்தப்பட்டுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.


கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரொனா தொற்று பரவலில் கோவை, தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது.  நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2600 ஐ கடந்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வீரியமடைந்துள்ளது. இதனால் வைரஸ் தொற்று பாதித்தவர்கள் பெரும்பாலானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிசன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் பிணங்கள் தேங்கியுள்ளன. தொடர்ந்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அளவுக்கு அதிகமான சடலங்கள் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. வெளிப்புறத்திலும் திறந்த வெளியிலும் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிணவறைக்கு அருகிலேயே வைரஸ் தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்க தகர சீட்டுகள் கொண்டு தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்கள் தரையில் கிடத்தப்பட்டு, ஊழியர்கள் கொரோனா பாதுகாப்பு உடைகளின்றி பிணங்களை கையாள்வது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. பிணவறை பகுதிக்கு உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க அவர்களது உறவினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ள நிலையில் இதற்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மின் மயானங்களில் பிணங்கள் குவிந்து கொண்டிருப்பதால் தகனம் செய்வதில் ஏற்படும் காலதாமதம், அரசு மருத்துவமனையில் சடலங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது.



இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனையில் விசாரித்த போது, ”கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகள் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதும் தொடர்கிறது. கோவையில்  8 மின் மயானங்களில் கொரொனாவால் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், எரியூட்ட காலதாமதம் ஏற்படுகிறது. தினமும் தொடர்ந்து அதிகளவிலான சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.


தற்போது இரவு 10 மணி வரை சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை. இதனால் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரே ஆம்புலன்சில் 5 முதல் 7 உடல்களை மின் மயானங்களுக்கு தகனம் செய்ய எடுத்துச் செல்லும் நிலை உள்ளது. அதிகளவிலான சடலங்கள் இருப்பதால் தகர சீட்டுகள் கொண்ட தற்காலிக கொட்டகையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது ஆபத்தான நிலையை உருவாக்கும். அரசு உடனடியாக கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை தகனம் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்