குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவு அளிக்குமாறு  தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. 

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்:

குடியரசு துணைத்தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஆளும் பாஜக அரசும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மும்முரமாக ஈடுப்பட்டது.

இதில் பாஜக சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்தவரும் மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவரான நயினார் நகேந்திரன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நயினார் அறிக்கை:

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.முக ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக வேண்டுகோள்! நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மாண்புமிகு மகாராஷ்டிரா ஆளுநருமான அண்ணன் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இண்டி கூட்டணியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

தென் பாரதத்தில் இருந்து ஒரு பெருமைமிகு தமிழரை, மூத்த தலைவரை, துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் ஆகும்.

நவீன் பட்நாயக் செய்த செயல்

இத்தருணத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2022-இல் நமது மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த போது, ஒடிசா மண்ணின் மகளான அவரை முன்னாள் ஒடிசா முதல்வர் திரு. நவீன் பட்நாயக் அவர்கள் கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளை தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

முதல்வருக்கு வேண்டுகோள்:

திரு. பட்நாயக் அவர்களுக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவிற்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான திரு. முக ஸ்டாலின் அவர்களுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.ஆகவே, நமது தமிழ் மண்ணின் மைந்தரான அண்ணன் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு மாண்புமிகு முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்!